நடிகர் சசிகுமார், கிடா பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் கிடா. இந்தப் படத்தை ரா.வெங்கட் என்பவர் எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் காளி வெங்கட், பூ ராமு, திலீப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீ ஸ்வரந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு எம் ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். தீசன் இதற்கு இசை அமைத்திருந்தார். சிறுவன் ஒருவன் அன்பாக வளர்க்கும் கிடா ஒன்று குடும்ப கஷ்டத்தின் காரணமாக விற்பதற்கு முடிவு செய்யப்படுகிறது. அதன் பின் சிறுவன் அந்த கிடாயின் மீது வைத்துள்ள அன்பு, அக்கிடாயை மீண்டும் எப்படி சிறுவனிடம் சேர்க்கிறது என்பதை கிராமத்து பின்னணியில் மிக அழகாக விவரித்து இருந்தார் இயக்குனர் வெங்கட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக ரா வெங்கட் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி ரா. வெங்கட் அடுத்ததாக, இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இது சம்பந்தமாக தான் எழுதிய கதையையும் சசிகுமாரிடம் கூறி இருக்கிறார். கதையில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் சசிகுமார் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். எனவே கிடா பட இயக்குனருடன் சசிகுமார் இணைய உள்ள இந்த படம் அயோத்தி திரைப்படத்தை போல் சசிகுமாருக்கு மாபெரும் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.