சத்யராஜ் பட இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார். இவரின் மறைவு செய்தி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் தான் திரைத்துறைக்காக தனது பெயரை ஆர்த்தி குமார் என்று மாற்றிக் கொண்டார்.

இயக்குனர் ஆர்த்தி குமார், கடந்த 2004 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான சவுண்ட் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். இந்த படத்தில் சத்யராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேசமயம் சத்யராஜின் நடிப்பில் வெளியான அழகேசன் திரைப்படத்தையும் ஆர்த்தி குமார் தான் இயக்கியிருந்தார். மேலும் இவர் சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் கதாசிரியரும், நடிகரும் ஆவார். அந்த வகையில் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான பெரியார் படத்தில் ராஜாஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டை ஹைக்ரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆர்த்தி குமார் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து ஆர்த்தி குமாரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களின்
இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.