தமிழ் சினிமாவின் தனி சகாப்தம் இளையராஜா. கோலிவுட் திரையுலகின் அடையாளமாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. 80-களில் தொடங்கி இன்று வரை அவரது பாடல்களை ஒலிக்காத ஊரும் இல்லை, நாடும் இல்லை. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும், ஏன் இந்திய மொழிகளுக்கு கூட முடி சூட மன்னனாக விளங்குகிறார் இளையராஜா. முதியோர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைய சமுதாயமும் இவரது பாடல்களுக்கும், இசைக்கும் அடிமை என்று சொல்வதே நிதர்சனம்.
தற்போதும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இசை அமைத்து வருகிறார். அண்மையில் அவரது இசையில் வெளியான திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் சூரி நடிக்கிறார். தற்போது விடுதலை 2-ம் பாகத்திற்கு இசை அமைத்து வருகிறார். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவரான பாடகர் மனோ இளையராஜா குறித்துபேசும்போது, எனக்கு இசை பிச்சை போட்டவர் இசைஞானி இளையராஜா என்று கண்கலங்கி நெகிழ்ந்து போனார்.
இந்திய திரை உலகில் பிரபல பின்னணி பாடகரான மனோ, தமிழ் மட்டுமன்றி பல மொழிப் படங்களில் பாடல்கள் பாடி உள்ளார். கிட்டத்தட்ட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடி இருக்கிறார். மேலும் 3 ஆயிரம் இசைச்கச்சேரிகளை அவர் நடத்தி உள்ளார். இது தவிர, பல படங்கலில் ஹீரோக்களுக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கிறார்.