பாமக சட்டவிதிகளின்படி நிறுவனர் ராமதாசுக்குதான் அதிகாரங்கள் உள்ளன. எனவே அன்புமணி நான் தான் தலைவர் என்று சொல்வது செல்லுபடி ஆகாது என்றும் அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தலைவர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பாமகவில் நடைபெறும் தந்தை – மகன் இடையிலான மோதல் குறித்து சி.என்.ராமமூர்த்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :- மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின்போது, அன்புமணியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். ஆனால் ராமதாஸ் முழு உண்மைகளை சொல்லவில்லை. அன்புமணி தனது தாயாரின் முகத்தில் குத்தியே விட்டார். அதன் காரணமாக அவரது முகமே வீங்கிவிட்டது. இந்த தாக்குதல் அண்மையில் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே அன்புமணியிடம், ராமதாஸ் அடிபட்டு இருக்கிறார். ராமதாஸ் எல்லோரையும் மிரட்டுவார். வன்னியர்களுக்கு குல தெய்வம் என்று சொல்வார். ஆனால் சௌமியா அன்புமணியின் முன்னால் பொட்டி பாம்பாக அடங்கி விடுவார். அந்த அளவுக்கு அச்சப்படுவார். பாஜகவுடன் தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு மருத்துவர் ராமதாசை 3 நாட்கள் அறையில் பூட்டி வைத்திருந்தார்கள். அதிமுக உடன் கூட்டணி அமைக்க எடப்பாடிக்கு அன்புமணியிடம் கடிதம் கொடுத்து அனுப்பினார். ஆனால் அன்புமணி, ராமதாசை பூட்டிவைத்துவிட்டு பாஜக உடன் கூட்டணி அமைத்தார். தைலாபுரம் தோட்டத்தில் 35 ஆண்டுகள் வேலை செய்தவர்கள் எல்லோரையும் அன்புமணி அடித்துவிரட்டி விட்டார். இதை எல்லாம் அங்கு பணிபுரிந்தவர்கள் நமக்கு கடிதம் எழுதுகிறார்கள்.
35 வயது ஆன அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தன்னுடைய தவறுதான் என்று மருத்துவர் ராமதாஸ் சொல்கிறார். ராஜ்யசபா எம்.பி ஆக 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதுவரை காத்திருந்துவிட்டு 36 வயது தொடங்கிய உடன் கலைஞரிடம் அழைத்து வந்து ராஜ்யசபா எம்.பி சீட் வாங்குகிறார். அவர் உடனடியாக டெல்லியில் பேசி அன்புமணிக்குத மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுக்கிறார். அன்புமணியிடம் தலைமைப் பண்பு இல்லை. மேடை நாகரிகம் தெரியவில்லை என்று சொல்கிறார். ஜி.கே.மணியிடம் இருந்து பாமக தலைவர் பதவியை வாங்கிக் கொண்டு கவுரவ தலைவராக நியமித்தார்கள். அதற்கு பிரதிபலனாக அவரது மகன் தமிழ்க்குமரனை, பாமக இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் சொன்னார். பொதுக்குழு கூட்டியபோது உள்ளே தமிழ்க்குமரன் குடும்பத்தினர் உள்ளே வரக்கூடாது பிரச்சினை செய்து அனுப்பியவர்தான் அன்புமணி.
ஜி.கே.மணி பாமகவின் தலைவராக இருந்தபோது மருத்துவர் ராமதாசின் ஒப்புதலின் பேரில் தான் நியமனங்கள் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டினாலும் ராமதாசின் ஒப்புதலோடு அறிவிக்கிறோம் என்று அறிவிப்பார்கள். ஆனால் தற்போது அன்புமணி நான்தான் தலைவர் என்கிறார். பொதுக்குழுவில் என்ன தலைவராக தேர்வு செய்துவிட்டனர். என்னை பொதுக்குழு தான் நீக்க முடியும் என்கிறார். ஆனால் மருத்துவர் ராமதாஸ் நான் தான் கட்சியின் நிறுவனர். நீக்க எனக்கு தான் அதிகாரம் உள்ளது சொல்கிறார். பாமகவின் சட்ட விதிகளின் படி கட்சியின் நிறுவனருக்கு தான் அதிக அதிகாரங்கள் இருக்கின்றன. இது அன்புமணிக்கு தெரியவில்லை. மத்திய அமைச்சராக இருந்து வன்னிய சமுதாய மேம்பாட்டிற்கு ஏதாவது செய்துள்ளாரா? பாமகவின் சட்ட விதிகளின் படி நிறுவனர் ஒப்புதலை பெற்றுதான் கட்சி தலைவர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். தற்போது நிறுவனர், தலைவர் என 2 பதவிகளும் மருத்துவர் ராமதாசிடம் உள்ளது. அதனால் தான் எல்லோரையும் அவர் கட்சியில் இருந்து நீக்கினார்.
பாமக பொதுக்குழுவில் எப்போது அன்புமணி மைக்கை தூக்கி போட்டுவிட்டு, பனையூர் பங்களாவில் என்னை வந்து சந்தியுங்கள் என்று பவுசு காட்டினாரோ அப்போதே கதை முடிந்துவிட்டது. ராமதாஸ் அதிகாரத்தை கையில் எடுத்து புத்திசாலித்தனமாக செயல்பட்டு அன்புமணியை ஒழிப்பதற்கான வேலைகளை செய்துவிட்டார். ராமதாஸ் எப்படி புத்திசாலித்தனமாக செயல்பட்டார் என்றால் முதலில் பொதுக்குழுவை கூட்டினார். 8 மாவட்ட செயலாளர்கள் வந்த உடன், அன்புமணி தன்னை நீக்கத்தான் கூப்பிடுகிறார். போக வேண்டாம் என்று தடுத்தார். அடுத்து, ஒவ்வொரு அணியாக கூப்பிட்டு ஆலோசனை நடத்தினார். அனைத்து கூட்டங்களையும் தைலாபுரம் தோட்டத்திலேயே நடத்தினார். சமூக முன்னேற்ற சங்கம் சிவபிரகாசம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு ரவுடிகளை அனுப்புகிறார். இன்றைக்கு மகன் ஆள் அனுப்புகிறார் என்று புலம்புகிறார். பேட்டி அளிப்பதற்கு முதல் நாளில் ஐ.டி. நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துகிறார். அன்புமணியை முதல்வராக்கும் வேலையை நீங்கள் செய்யுங்கள் என்று சொன்னார். அவர்களை நம்பவைத்து, மறுநாள் கழுத்தறுத்து விட்டார்.
பாமகவின் சட்டத்திட்டங்களின் படி மருத்துவர் ராமதாசுக்கு தான் முழு அதிகாரமும் உள்ளது. அன்புமணி பனையூரில் அலுவலகம் இருக்கிறது வாங்க என்று சொல்கிறபோதே 25 பேரிடம் மாவட்ட செயலாளர் மாற்ற காசு வாங்கிவிட்டார். அவர்கள் பணம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்கள். ராமதாஸ் 25 பேரை நியமிக்கிறாரா? இல்லையா? என்று பாருங்கள். அரியலூர் மாவட்ட செயலாளரை மாற்றிவிட்டார். பாமக விதிகளின்படி சிறுபான்மையினராக உள்ளவர்தான் பொருளாளராக இருக்க முடியும். தற்போது சையது மன்சூர் என்பவரை கொண்டுவந்து பொருளாளராக நியமித்தார். திலகபாமா பொறுப்பு வகித்தது தவறு. பாமகவில் அன்புமணியால் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் ராமதாஸ் கொண்டுவந்து பொறுப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.