தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இந்திய அளவில் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே திரைப்படத்தில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. அடுத்தது பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார். அதன்படி இந்த படத்தினை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள புதிய படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல பின்னணி பாடகர்களான திப்பு – ஹரிணி ஆகியோரின் மகன் சாய் அபியங்கர், ஆசை கூட, கட்சி சேர ஆகிய ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிலையில் தற்போது சூர்யா 45 திரைப்படத்திலும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.