நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புலி’. இந்த படத்திற்காக விஜய் ரூ.15 கோடி சம்பளம் பெற்றதாகவும், ஆனால் 2016 – 17ம் ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்த போது இந்த வருமானத்தை மறைத்ததாகவும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. 2015 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும், அவர் தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கையும் ஒப்பிட்டு பார்த்ததில் அவர் வருவாயை மறைத்தது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமக்கு அபராதம் விதிப்பதாக இருந்தால் , 2019ம் ஆண்டிலேயே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் கால தாமதமாக வருமான வரித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆகையால் காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்த செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மனுவிற்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணக்கு வந்தபோது, இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வருமான வரித்துறை தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நடிகர் விஜய் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.