மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மொத ராத்திரி’. புதுமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் நகைச்சுவை கலாட்டாவுடன் உருவான இப்படம், தற்போது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
திரைப்பிரபலங்களின் தொடர் பாராட்டு
படத்தின் வித்தியாசமான தலைப்பே வெளியீட்டுக்கு முன்பு பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தமிழ் சினிமாவின் முன்னணிப் பிரபலங்கள் பலரும் இப்படத்தைக் கண்டு பாராட்டி வருகின்றனர்.

ஏற்கனவே, நடிகர் சூரி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சிம்பு மற்றும் ‘நந்தன்’ பட இயக்குநர் இரா.சரவணன் உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் (இணையதள) பக்கம் வாயிலாக இப்படத்திற்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். இதில் நடிகர் சூரி படக்குழுவினரை நேரில் சந்தித்தும் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்
இந்த வரிசையில், தற்போது இப்படத்தைப் பார்த்து வியந்துள்ள பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியைத் தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து உற்சாகமாகப் பாராட்டியுள்ளார். உலகநாயகனிடமிருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, இளம் இயக்குநர் ராஜா கருப்பசாமிக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இயக்குநர் ராஜா கருப்பசாமியின் நெகிழ்ச்சியான பதிவு
கமல்ஹாசனைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றது குறித்து இயக்குநர் ராஜா கருப்பசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“கோடம்பாக்கத்துல இருக்குற எல்லாருக்கும் காட்டணும்… நீங்க யாருனு…’ உங்கள் சினிமாவைப் பற்றிப் பேசாமலோ, உங்கள் படங்களைப் பார்க்காமலோ, உங்கள் கதாபாத்திரங்களைப் பற்றி விவாதிக்காமலோ அல்லது நீங்கள் கதையைச் சொல்லும் விதத்திலிருந்து எதையாவது கற்றுக்கொள்ளாமலோ என் வாழ்க்கையில் ஒரு நாள் கூட கழிந்ததில்லை.
என்னைப் பொறுத்தவரை, நீங்கள் வெறும் ஒரு நடிகர் மட்டுமல்ல, சினிமாப் பள்ளிக்கூடம். ஒரு நடிகர் எப்படித் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிட முடியும் என்பதையும், ஒரு திரைப்பட இயக்குநர் எப்படிச் சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும் என்பதையும் உங்கள் படங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தன. அதேபோல, சினிமா எப்படி நம்மை மகிழ்விக்கவும், சிந்திக்கத் தூண்டவும், சிரிக்கவும், அழவும் வைக்க முடியும் என்பதையும், திரையில் படம் முடிந்த பிறகும் அது எப்படி நம்முடனேயே தொடர்ந்து பயணிக்கிறது என்பதையும் உங்கள் படங்கள் உணர்த்தின.
சினிமாவை முழுமையாகப் புரிந்துகொண்டதாக நான் நினைக்கும் போதெல்லாம், உங்கள் படங்களில் ஏதேனும் ஒன்று, இன்னும் எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியது. திரையில் உங்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகனாக இருந்து, இன்று சொந்தமாகப் படங்கள் இயக்கும் ஒருவனாக மாறியிருக்கும் இந்த நீண்ட பயணத்தில், உங்கள் சினிமா எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது.
உங்கள் சினிமா எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், உங்கள் படங்கள் எனக்குள் ஏற்படுத்திய உணர்வில் ஒரு சிறு பகுதியையாவது மற்றவர்களுக்குக் கடத்தும் வகையிலான ஒரு படத்தை நான் என்றாவது ஒரு நாள் இயக்கினால், நான் மிகவும் பாக்கியசாலி என்று கருதுவேன். கமல் சார், இந்தச் சிறந்த சினிமாவுக்காக உங்களுக்கு நன்றி. அந்தத் துணிச்சலுக்காக நன்றி. நீங்கள் கற்றுக்கொடுத்த பாடங்களுக்காக நன்றி. அனைத்திற்கும் மேலாக, என்னைப் போன்ற தலைமுறையினரை சினிமாவின் மீது தீராத காதலைக் கொள்ளச் செய்தமைக்கு நன்றி. என்றும் உங்கள் ரசிகன்.” இவ்வாறு இயக்குநர் ராஜா கருப்பசாமி தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இளம் இயக்குநரின் இந்த மனமார்ந்த பதிவும், உலகநாயகனின் பாராட்டும் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
வசூலில் அசுர வேட்டை.. ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை பின்னுக்கு தள்ளிய ஸ்பைடர்மேன்!
