கமல் தயாரிப்பில் புதிய படம்… இரவு, பகலாக உழைக்கும் சிம்பு..
தமிழ் சினிமா வளர வளர, தன்னையும் வளர்த்திக் கொண்டவர் சிம்பு. “ஐ எம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்”, என சுட்டிச்சிறுவனாக சினிமாவில் தடம் பதித்த சிம்பு, இன்று சினிமா வித்தகனாக உயர்ந்து நிற்கிறார். குழந்தை நட்சத்திரமாக பிரசிவித்த சிம்பு, தந்தையின் கரம்பிடித்து இளம் நாயகனாகவும் முதல் அடி வைத்தார். காதல் அழிவதில்லை படத்தில், காதலியை கரம் பிடிக்க முடியாமல் துடிக்கும் இளைஞராக நடித்து ரசிகர்களை கண்ணீரால் கரையவிட்ட சிம்பு, தனது அடுத்தடுத்த படங்களில் ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்தார்.
செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என ஒரே லைனில் சென்ற சிம்பு, மாநாடு திரைப்படத்தின் மூலம், சினிமாவில் விட்ட கொடியை மீண்டும் பிடித்தார். நடிப்பு மட்டுமல்ல, நடனத்திலும் கெட்டிக்காரன் என்பதை தன் ஒவ்வொரு பாடல் வழியாகவும் உணர்த்திக்கொண்டே இருப்பார். சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் பெரும் ஹிட் அடித்தன. இடைவெளிக்கு பிறுகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள சிம்பு, கோலிவுட்டில் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.
தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் அவர் புதிய படம் நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். பான் இந்திய அளவில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கிறது. படத்திற்கான அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆன போதிலும் படப்பிடிப்பு தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், படப்பிடிப்புக்காக நடிகர் சிம்பு துபாயில் தன்னை தயார்படுத்தி வருவதாகவும், இம்மாத இறுதியில்தான் சிம்பு சென்னை வருவார் என்றும் பிப்ரவரியில் படப்பிடிப்பை தொடங்கி விடுவார் என்றும் தெரிகிறது.