பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் கே பி ஒய் பாலாவை பாராட்டியுள்ளார்.
ஸ்டாண்ட் அப் காமெடியனான பாலா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நகைச்சுவை அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார். மேலும் பாலா ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் ஈரோடு மாவட்டம் கடம்பூரைச் சுற்றியுள்ள மலைவாழ் மக்களுக்கு உதவி செய்யும் வகையில், கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள மக்களுக்கு அவசர உதவி காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாலா, “நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் என் அப்பா பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். என்னைப் பொறுத்தவரை இவர்கள் மலைவாழ் மக்கள் கிடையாது. எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தான். நான் செய்த உதவியினால் இனி அங்கு வாழும் 8000 உயிர்களும் பாதுகாப்பாக இருக்கும். மக்களுக்கு நன்றி நீங்கள் கொடுத்த அன்பு ஆதரவினால் தான் இந்த மாதிரியான உதவிகள் என்னால் செய்ய முடிகிறது” என்று பேசியுள்ளார்.
பாலா செய்த இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.