ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்திய படமாக வெளியானது. கிட்டத்தட்ட 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் உலகம் முழுவதும் 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சிலை கடத்தல் சம்பந்தமான கதைகளத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரஜினிக்கும், நெல்சனுக்கும் ஒரு சிறந்த படமாக அமைந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து தனது வெற்றிப் பாதையில் நகர தொடங்கியுள்ளது. இது குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜயும் இயக்குனர் நெல்சன் திலிப் குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.விஜய் ஏற்கனவே நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் நெல்சன், ஜெயிலர் படக்கதையை ரஜினியிடம் சொல்ல சொன்னது விஜய் தான் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் ஒரு சில காரணங்களுக்காக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த தகவல் அந்த மோதலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.