விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்கும் புதிய படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது இரண்டு வானம், ஓர் மாம்பழ சீசனில் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில்தான் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயற்றியுள்ள இந்த படத்திற்கு ஓஹோ எந்தன் பேபி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை விஷ்ணு விஷால், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஹரிஷ் கண்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் ருத்ராவுடன் இணைந்து மிதிலா பல்கர் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நாளை (மே 29) மாலை 5 மணி அளவில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் இந்த படமானது 2025 ஜூலை மாதம் திரைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.