சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறிய யுவன் சங்கர் ராஜா
- Advertisement -
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது சமூக வலைதளப் பக்கத்திலிருந்து வெளியேறினார்.

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த வெற்றிகரமான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மெகா ஹிட் அடித்துள்ளன. யுவன் பாடல்களுக்கு அன்று முதல் இன்று வரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காதல், மகிழ்ச்சி, சோகம், சந்தோஷம் என அனைத்திற்கும் ஏற்றபடி பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார், காதல் தோல்வி பாடல்கள் என்றாலே யுவன் தான் அனைத்து இளைஞர்களுக்கும் நினைவுக்கு வரும், அந்த அளவு அவரது பாடல்கள் ஹிட்.

இவர் இசையமைப்பு மட்டுமன்றி பல பாடல்களை பாடியும் வருகிறார். ஆல்பம் பாடல்களையும் தயாரித்து வருகிறார். அண்மையில் அவரது தயாரிப்பில் பொன் ஒன்று கண்டேன் திரைப்படமும் வெளியானது. அசோக் செல்வன் மற்றும் வசந்த்ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையும் அமைத்திருந்தார். மேலும், தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இப்படத்தில் விஜய் பாடிய விசில் போடு என்ற பாடல் அண்மையில் சமூக வலைதளங்களில் வௌியானது. இந்த பாடல் வரவேற்பை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது. இருப்பினும், இது விஜய்க்கு ஏற்ற போல மாஸாக இல்லை என்று விஜய் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் யுவன் சங்கர் ராஜாவை வறுத்தெடுத்து வந்தனர். தொடர்ந்து மீம்ஸ் பதிவிட்டு, யுவனை ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், ஒரு கட்டத்தில் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறினார்.