குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் கத்தியை எடுத்து மார்பில் குத்திக் கொண்ட மகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்த பிரபாகரன் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் பாலகிருஷ்ணன்(19). குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் தனது மனைவிடம் தகராறு செய்து கொண்டு இருந்தார். இன்று காலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கத்தியை எடுத்து குத்தி கொள்ளப் போவதாக மிரட்டி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் தொடர்ந்து தகராறு செய்ததுடன், வெளியில் அனைவரும் பார்க்கின்றனர், அசிங்கமாக உள்ளதாக கூறி தந்தையின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி பாலகிருஷ்ணன் தனது மார்பில் வேகமாக குத்திக் கொண்டதில் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதையடுத்து பதறிப்போன அவரது பெற்றோர் பாலகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து போன பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.