திருவள்ளூர் அருகே ஜிம் பயிற்சியாளரை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்
திருவள்ளூர் அருகே ஜிம் பயிற்சியாளரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறைத்து தாக்கிவிட்டு தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (23). திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் ஜிம் வைத்து நடத்தி, உடற்பயிற்சி கூட பயிற்சியாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு ஜிம் முடிந்த பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் பேரம்பாக்கம் வழியாக சென்றுள்ளார்.
அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரிடம் லிப்ட் கேட்டது போல் 25 வயதுடைய நபர் ஒருவர் நடித்துள்ளார். ஆனால் இரவு நேரத்தில் மணி இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து புறப்பட்டு உள்ளார்.
பின்னர் சிறிது தூரம் சென்ற பிறகு இரண்டு பேர் லிப்ட் கேட்டது போல் அவரை வழி மறைத்துள்ளனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் அவரை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்குவதற்கு முன்பாக சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயன்ற போதும் துரத்தி, துரத்தி அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவ்வழியாகச் சென்ற ஒருவர் சாலையில் ரத்த காயங்களுடன் கிடந்த மணியை கண்டு அதிர்ச்சியடைந்து மப்பேடு காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.
படுகாயமடைந்த மணியை மீட்ட போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மணிக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் முதல் கட்ட விசாரணையில் மணி அவருடைய உறவினருக்கும் நிலப்பிரச்சினை தகராறு இருந்து வந்ததால் அவர்கள் ஆள் வைத்து தாக்கியிருக்க கூடுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணி ஜிம்மிலிருந்து கிளம்பி வீட்டிற்கு புறப்பட்டபோது அவரை யாராவது பின் தொடர்ந்து சென்று உள்ளார்களா என்பதை குறித்து ஜிம்மில் இருந்து அவர் செல்லும் வழித்தடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.