சென்னை காசிமேட்டில் வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காசிமேடு சிங்காரவேலன் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன். இவரது மகன் குமரன். இவர் வெளிநாட்டில் கப்பல் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குமரன் விடுமுறையில் காசிமேட்டிற்கு திரும்பி உள்ளார். இதனை அடுத்து, குடும்பத்தினர் குமரனுக்கு பெண் பார்த்து திருணம் ஏற்பாடு செய்துள்ளனர். இன்னும் 15 நாட்களில் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு குமரன் வீட்டின் அருகே ஒரு கும்பல் மது அருந்தியுள்ளனர். அப்போது, தனது நண்பர் ராகேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த குமரன், அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரடைந்த காசிமேடு பகுதியை சேர்ந்த பட்டு சரவணன் உள்ளிட்ட 4 பேர், குமரனை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயம் அடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். மேலும், அவர்களை தடுக்க முயன்ற குமரனின் தந்தை விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர் ராகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் பட்டு சரவணன், ஆகாஷ், அபினாஷ் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். குற்றவாளிகளை போலீசார் பிடிக்க சென்றபோது வழுக்கி விழுந்து 2 பேருக்கு கை, கால்களில் அடிபட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.