சென்னை விருகம்பாக்கத்தில் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் திருட்டு மோசடி பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு.
சென்னை சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் மெயின் ரோட்டில் ராஜேந்திர வர்மா என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார்.
இவரது கடைக்கு ஜனவரி 02ம் தேதி காலை 11மணி அளவில் மொப்பெட்டில் வந்த இளம்பெண் ஒருவர் அங்கிருந்த கடை ஊழியரிடம் 10 பவுன் நகை வாங்க வந்துள்ளேன் என்று கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய கடை ஊழியர் அவருக்கு பல விதமான மாடல்களில் உள்ள செயின்களை எடுத்து காண்பித்தார். அங்குள்ள எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம்பெண், ”இப்போது வேண்டாம் பின்னர் வருகிறேன்” என்று கூறி திடீரென அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சிறிது நேரம் கழித்து கடையில் இருந்த நகைகளை ராஜேந்திர வர்மா சரி பார்த்தபோது அதில் 4பவுன் செயின் ஒன்று மாயமாகி இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
நகை வாங்குவது போல வந்த இளம்பெண் நூதனமான முறையில் கைவரிசை காட்டி நகையை சுருட்டி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, ராஜேந்திர வர்மா விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம பெண்ணை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.