சென்னை பெரவள்ளூரில் சிறுவனை சரமாரியாக வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேர் காவல் நிலையத்தில் சரண்டர்.
சென்னை பெரவள்ளூர் கே சி கார்டன் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 17 வயது சிறுவன். இவர் கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று(23.02.2023) மதியம் 2 மணி அளவில் பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஐந்து பேர் இவரை துரத்திக் கொண்டு ஓடினர். உடனே சிறுவன் அப்பகுதியில் உள்ள ஹாட்ஸ்பாட் என்ற துணிக்கடையில் ஆடை மாற்றும் அறையில் ஓடி ஒளிந்து கொண்டார். அவரை பின்தொடர்ந்து சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆடை மாற்றும் அறையிலேயே வைத்து சரமாரியாக வெட்டியதில் சிறுவனுக்கு தலை, வலது பக்கம் காது மற்றும் இடது முழங்கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயம் விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த கும்பல் கடையிலிருந்து தப்பி ஓடி விட்டது.


அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருவிக நகர் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டு பட்ட சிறுவனும் அவரது நண்பரான பயாஸ் என்கின்ற மணிகண்டன் ஆகியோர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒயின்ஷாப்பில் மது அருந்தி கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த 17 வயது சிறுவனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இதில் மணிகண்டன் மற்றும் வெட்டுப்பட்ட 17 வயது சிறுவன் இருவரும் சேர்ந்து அந்த 17 வயது சிறுவனை அடித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை மனதில் வைத்துக் கொண்டு சிறுவன் நேற்று முன்தினம் தனது நான்கு நண்பர்களை அழைத்துக் கொண்டு திரு வி க நகர் கே சி கார்டன் பகுதிக்கு சென்று மணிகண்டனை தேடி வந்துள்ளனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால் மணிகண்டன் உடன் இருந்த சிறுவனை துரத்தி துரத்தி வெட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்ளிட்ட அவரது நண்பர்களை தேடி வந்த நிலையில் நேற்று(23.02.2023) சிறுவன் உட்பட அவரது நண்பர்கள் 4 பேர் என 5 பேரும் திருவிக நகர் காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார்கள்.

சரண்டர் ஆனவர்களிடம் விசாரனை நடத்தியதில் திரு வி க நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ள திருமலை என்பவரின் மகன் 17 வயது சிறுவன் மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கங்கா கணேஷ் 19, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பவன் குமார் 18, பெரம்பூர் பகுதியை சேர்ந்த அமர் 18, பெரம்பூர் குருசாமி தெரு பகுதியை சேர்ந்த முகமது ஏஜியாஸ் 18 என்பது தெரிய வந்தது. இதில் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் மற்ற நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவிக நகர் போலீசார் சிறையில் அடைத்தனர்.


