சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் மோசடி. சிதம்பரம் அருகே இரிடியம் உள்ள கோபுர கலசங்கள் இருப்பதாக கூறி ஏமாற்றம். சொகுசு காருடன் வாலிபர் கைது. 2 கலசங்கள் பறிமுதல்
சிதம்பரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(25). இவர் சிதம்பரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக உள்ளார். இவரிடம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ் என்கிற ராஜசேகர்(25) என்பவர் விக்னேஷை தொடர்பு கொண்டு தன்னிடம் தனக்கு சொந்தமான கோயிலில் இரிடியம் சக்தி கொண்ட 2 கோபுர கலசங்கள் இருப்பதாகவும், அதன் விலை 10 லட்சம் எனவும், அதை விற்பதற்கு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த கலசங்களை வீட்டில் வைத்தால் நல்ல செல்வம் செழிக்கும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையாநகர் பாலம் அருகே ரூ 10 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் வந்த ராஜசேகரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது ராஜசேகர் விக்னேஷை திட்டி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார். இச்சம்பவம் குறித்து விக்னேஷ் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் உத்தரவின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், கஜேந்திரன் மற்றும் போலீசார் இன்று வல்லம்படுகை சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் இருந்தவர் இரிடியம் உள்ளதாக கூறி விக்னேஷை ஏமாற்றிச் சென்ற ராஜசேகர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரிலிருந்த கருப்பு முலாம் பூசப்பட்ட கலசம் ஒன்றும், முலாம் பூசப்படாத ஒரு கலசம் உள்ளிட்ட சில பொருட்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றவாளியை பிடித்தது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சிதம்பரம் டிஎஸ்பி லாமேக்,
அண்ணாமலைநகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜசேகர் கலசத்தில் இருடியம் எஃபெக்ட் இருப்பதாக கூறி ஏமாற்றி மோசடி செய்துள்ளார். அண்ணாமலைநகரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம் 2 கலசங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றும் ரூ 5 லட்சம் என கூறியுள்ளார். இதற்காக அரிசியில் காந்தத்துகளை கலந்து, கலசத்திலும் காந்தத் துகளை கலந்து அதை இழுப்பது போல் செய்து இரிடியம் எஃபெக்ட் எனக் கூறி ஏமாற்றி உள்ளார். இவரிடமிருந்து ரூ 10 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் கலசங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து இருக்கிறோம்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளியான இவர், இதற்கு முன்பு இதுபோல் ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.