சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.கே.பி நகர் பி.வி. காலனியைச் சேர்ந்த கணேசன் மீது 5 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 14 கொள்ளை வழக்குகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ரூ.25 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் நகை கொள்ளை சம்பவம், கஞ்சா தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளிலும் அவர் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு துப்பாக்கி முனையில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த அவர், பின்னர் ஜாமினில் வெளியே வந்த பிறகு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளில் அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மாதவரம் பகுதியில் கணேசன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று காலை மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே சென்றனர். அப்போது அவரை பிடிக்க முயன்றபோது, கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணா நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் காவலர் தினேஷ்குமார் ஆகியோரை தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், கணேசனின் இடது மார்பில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
என்கவுண்டரில் உயிரிழந்த தொப்பை கணேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து கணேசனின் உறவினர்கள் வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பே போலீசார் கணேசனை கைது செய்ததாகவும், வழக்கறிஞர் மூலம் சரணடைய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாகவும், காவல்துறையினருக்கு பணம் கொடுத்த விபரங்களையும் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அதற்கு உடன்படாத காரணத்தால் போலீசார் அவரை மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே அழைத்துச் சென்று சுட்டுக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போலீசார் வழங்கிய விளக்கம் மற்றும் உறவினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆகிய இரு தரப்பின் தகவல்களாலும் மாதவரம் என்கவுண்டர் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
