கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே தற்கொலை!
சென்னையில் சாலிகிராமம் திலகர் தெருவில் வசித்து வந்தவர் கங்காதரன். இவர் சித்த மருத்துவர் ஆவார். இவரது மனைவி சாருமதி (57). நெடுஞ்சாலைத் துறையில் சூப்பிரண்டாக பணிப்புரிந்து வந்தார்.

கங்காதரன், சாருமதி தம்பதிகளான மகள் ஜனபிரியா. கங்காதரன் கடந்த பல மாதங்களாகவே கடன் பிரச்சினையால் வேதனைப் பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் வேகம் அடைந்த கங்காதரன் கடந்த பதினொன்றாந்தேதி நள்ளிரவில் உறவினர் ஒருவருக்கு தற்கொலை செய்யப் போவதாக செல்போன் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

பின்னர் கங்காதரன் அவரது மனைவி சாருமதி மகள் ஜனபிரியா ஆகிய மூன்று பேரும் அளவுக்கு அதிகமாக விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். இதில் கங்காதரன் அவரது மகள் ஜனபிரியா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சாருமதியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சாருமதி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
கடன் பிரச்சினையால் சித்த மருத்துவரான கங்காதரன் குடும்பமே பலியாகி விட்டது. கங்காதரனுக்கு கடன் கொடுத்தவர்கள் யார்? யார்? அவரை யாரேனும் மிரட்டினார்களா? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றார்கள்.