திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை. ஆணையர் அலுவலகம் முற்றுகை
ஆவடி அருகே ரோந்து வாகன காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உறவினர்கள் சுமார் 50 பேர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி அருகே அண்ணனூர் தேவி நகரைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம்(32). இவர் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராகப் பணியில் இருந்தபோது கடந்த 5 -ந் தேதி ரோந்து வாகனம் விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில் வாகனத்தின் முன் பகுதி லேசாக சேதம் அடைந்தது. வாகனத்தில் இருந்த வள்ளிநாயகம், உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர்.
இந்நிலையில் கடந்த 8 -ந் தேதி வள்ளிநாயம் தீடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் விபத்திற்குள்ளான வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை. அந்த வாகனத்தை பழுதுபார்க்க 7 லட்சம் ரூபாய் செலவை வள்ளிநாயகத்தை கொடுக்கச் சொல்லி அதிகாரிகள் நிர்பந்தப் படுத்தியுள்ளனர். மேலும் அதனை தொடர்ந்து அதிரடியாக வள்ளிநாயகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதனால் மன உளச்சல் அடைந்த காவலர் வள்ளிநாயகம் 11 -ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உடல் சென்னை கேஎம்சி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் வள்ளிநாயகத்தின் மனைவி திலகவதி(28) அவருடைய மகன்கள் சேகர்(7) சித்தார்த்(5) ஆகிய இரண்டு குழந்தைகள் அனாதையானதாக உறவினர்கள் சுமார்(50) பேர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போலீஸ் குடும்பத்தினர் முற்றுகையிட்டதை வீடியோ எடுத்த நியூஸ் 18 நிருபரை போலீசார் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.