புழல் மத்திய சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம். காவல்துறையினர் வலைவீச்சு.
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற சம்பவங்களில் கைதாகி விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செம்மஞ்சேரி பகுதியில் குடியேறி கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் துரைப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்திருந்தது. சிறைக்குள் கைதிகளுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் தூய்மை பணி, சுகாதார பணி, தோட்ட வேலை, சமையல் வேலை என்ற அடிப்படையில் ஜெயந்திக்கு நேற்று தூய்மை பணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கைதிகளை உறவினர்கள் வந்து சந்திக்கும் நேர்காணல் அறை பகுதியில் ஜெயந்திக்கு தூய்மை பணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை சிறையில் வழக்கம் போல கைதிகளை கணக்கெடுக்கும் பணியின் போது பெண் கைதி ஜெயந்தி காணாமல் போனது தெரிய வந்தது.
இது தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் சிறையில் இருந்து தப்பியோடிய பெண் கைதி ஜெயந்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிறைக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் என பல அடுக்கு உயர் பாதுகாப்பு கொண்ட புழல் சிறையில் இருந்து பெண் கைதி ஒருவர் தப்பி சென்றுள்ள சம்பவம் சிறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.