திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன். இவரின் அடையாறு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் 10 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது.
இதைபோல, தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல், தி.நகர் திலக் தெருவில் உள்ள அவரது அலுவலகம், அடையாறு எல்பி சாலையில் உள்ள Tvh அடுக்குமாடி குடியிருப்பு, அண்ணாநகர் கிழக்கு 5 வது மெயின் ரோட்டில் உள்ள பரணி சுபலாஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, பாலாஜி பல் மருத்துவமனை, வேளச்சேரி அலுவலகம் பூந்தமல்லி சவீதா பல் மருத்துவமனை, ஸ்ரீபெரும்புதூர் தண்டலத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் கல்லூரி, புதுச்சேரி அகரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
சவிதா கல்லூரியில் சில முக்கிய ஆவணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதனை வருமானவரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த மறுத்து விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் தேவரியம்பாக்கத்தில் உள்ள மதுபான ஆலை, அமைந்தகரை அய்யாவு காலனியில் உள்ள ஆடிட்டர் வீடு உள்பட தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெகத்ரட்சகன் போட்டியிடும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக ரூ. 110 கோடி ரூபாய் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தார். தனது மனைவிக்கு ரூ. 43 கோடி இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தற்போது ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனையை நிகழ்த்தி வருகின்றனர்.
இவருக்கு சொந்தமாக மருத்துவகல்லூரிகள் உள்பட 15 கல்லூரிகள் உள்ளன. முக்கியமாக அவரின் மருத்துவ கல்லூரிகள் மூலமாக அதிக அளவு வருமானம் கணக்கின்றி வந்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 600 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று 2 வது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது .மேலும் ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை 2022 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறை சிறையில் அடைத்துள்ளது. மேலும் ஜூலை மாதம் திமுக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அவரது மகனும், திமுக எம்பியுமான கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 2 பேரிடமும் தனித்தனியாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இன்று திமுகவின் மற்றொரு எம்பியான ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருவது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.