குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதில் தற்போது வரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் AI171 என்கிற போயிங் 787 ட்ரீம் லைனர் ரக பயணிகள் விமானம் பகல் 1.39 மணிக்கு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் புறப்பட்ட 10 நிமிடத்தில் மெகானி நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியின் உணவகக் கட்டத்தின் மீது விழுந்து நொறுகியது. அப்போது விமானத்தில் தீப்பிடித்து பல நூறு மீட்டர் உயரத்துக்கு எரிந்து வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஏர் இந்தியா விமானத்தில் 12 ஊழியர்கள் உள்பட 242 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் குடியிருப்புகள் நிறைந்த மேகானி நகர் என்னும் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். சுமார் 90 மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.