கோடிக்கணக்கில் குவிந்த சொத்துக்கள்? பலத்த அதிகார வர்க்க பின்னணியில் ஆவணங்கள் சிக்கின திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முக்கிய பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரி வீட்டில் அதிகாலை வேளையில் லஞ்ச ஒழிப்புத்துறை (ACB) அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை வேளையில் அதிரடி சோதனை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை செயல் அதிகாரியாக (Deputy EO) பணியாற்றி வருபவர் லோகநாதம். இவர் திருப்பதியில் உள்ள பெத்தகாப்பு லே அவுட் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களைக் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக லோகநாதத்தின் நடவடிக்கைகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்நிலையில், அவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், இன்று அதிகாலை முதலே அவரது வீட்டை முற்றுகையிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சிக்கிய பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள்
தற்போது திருமலை ஏழுமலையான் கோவிலின் துணை செயல் அதிகாரியாகப் பொறுப்பு வகித்து வரும் லோகநாதம், இதற்கு முன்பாகவும் தேவஸ்தானத்தின் பல்வேறு முக்கியப் பிரிவுகளிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார். அந்த பதவிக் காலங்களில் அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கிச் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்றைய சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கான ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் முக்கியப் பத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தீவிரம் அடையும் விசாரணை
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை லோகநாதத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி தேவஸ்தானத்தின் உயர் அதிகாரி வீட்டிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியிருப்பது, தேவஸ்தான வட்டாரத்திலும் பக்தர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
