விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்- ஒரு லட்டு ரூ.27 லட்சத்திற்கு ஏலம்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பாலாப்பூர் விநாயகர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த லட்டு ரூ.27 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பாலப்பூரில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை மண்டபத்தில் பிரதிஷ்டை செய்து சிறப்பு லட்டு தயார் செய்து 10 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். பூஜையில் வைக்கப்படும் லட்டு விநாயகர் விசர்ஜனம் செய்வதற்கு முன்பு ஏலம் விடப்பட்டு வருகிறது. அவ்வாறு 1994- ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ரூ.450 ஏலத்தில் விற்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் மண்டபத்தில் வைக்கப்படக்கூடிய லட்டு பல லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இந்த ஆண்டு பாலப்பூர் லட்டு ஏலத்தில் பெற 36 பேர் போட்டியிட்டனர்.
இதில் தாசரி தயானந்த ரெட்டி ரூ.27 லட்சத்திற்கு பாலாபூர் லட்டௌ ஏலத்தில் பெற்று கொண்டார். பாலாபூர் லட்டு கடந்த ஆண்டு ரூ.24.60 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.2.40 லட்சம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. பாலப்பூர் விநாயகருக்கு ஏலத்தை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பாலாபூர் கணபதி உற்சவ் கமிட்டி அமைப்பாளர்கள் தாசரி தயானந்த ரெட்டிக்கு கணேஷ் லட்டு வழங்கினார்கள்.
பாலாபூர் கணபதி உற்சவ சமிதி கடந்த 1994- ஆம் ஆண்டு முதல் லட்டு ஏலம் நடத்தி வருகிறது. ஆனால், 2020-ல் கொரோனா காரணமாக லட்டு ஏலம் நடைபெறவில்லை. லட்டு ஏலத்தில் முதன்முதலில் 1994-ம் ஆண்டு ரூ.450-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் இந்த லட்டு பெற போட்டி அதிகரித்து அதன் விலையும் அதிகரித்து வருகிறது. 2010ல் லட்டு ஏலத்தில் அதிகப்பட்சமாக முதல்முறையாக ரூ.10.32 லட்சத்துக்கு ஏலம் போனது. அதன் பிறகு பாலாப்பூர் லட்டு ஏலத்தில் பல லட்சத்திற்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு விநாயகர் விழாக் குழு உறுப்பினர் வாங்கெட்டி லக்ஷ்மரெட்டி ரூ.24.60 லட்சத்துக்கு ஏலத்தில் பாலாபூர் லட்டு பெற்றார்.
ஏலத்தை தொடர்ந்து ஐதராபாத் சுற்றுப்பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு உசேன்சாகர் ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதற்காக ராட்சத கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் பணியில் விழா கமிட்டினர் ஈடுபட்டுள்ளனர்.