கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு?
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா கண்ணூர் எக்ஸிக்யூட்டிவ் ரயிலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் வரை இயக்கப்படும் எக்ஸிக்யூட்டிவ் ரயில் நேற்று இரவு 11.45 மணிக்கு கண்ணூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயில் இன்று பிற்பகல் மீண்டும் ஆலப்புழா புறப்படும் இந்த நிலையில் இந்த ரயில் கண்ணூர் ரயில் நிலையம் மூன்றாவது நடைமேடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 1:45 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ எரிந்து கொண்டிருந்ததை ரயில்வே ஊழியர்கள் பார்த்தனர். உடனடியாக ரயில்வே ஊழியர்கள் மற்ற ரயில் பெட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால் தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ரயில் நிலையத்துக்குள் சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ரயிலில் எஞ்சின் இல்லாமல் இருந்த காரணத்தினால் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறும் ரயில்வே அதிகாரிகள், சதி வேலை காரணமா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.