Homeசெய்திகள்இந்தியாகூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் விபரீதம்... உடைந்த பாலத்தில் சென்ற கார்  ஆற்றில் கவிழ்ந்து 3...

கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் விபரீதம்… உடைந்த பாலத்தில் சென்ற கார்  ஆற்றில் கவிழ்ந்து 3 பேர் பலி!

-

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலத்தில் கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம பரேலியில் இருந்து சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் படாவுன் மாவட்டத்தில் உள்ள டேடாகஞ்ச் நோக்கி காரில் சென்றுள்ளனர். ஃபரித்பூர் பகுதியில் உள்ள ராமகங்கா நதியின் மீது கட்டப்பட்ட பாலத்தில் சென்றபோது, பாலம் உடைந்திருந்ததால் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்க முயன்றனர். எனினும் இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலத்தின் முன்பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது. ஆனால் இந்த மாற்றம் கூகுள் மேப்சில் புதுப்பிக்கப்படவில்லை. இதன் விளைவாக, தவறாக வழி நடத்தலால் இந்த விபத்து நடந்துள்ளதாக அப்பகுதி வட்ட அதிகாரி அசுதோஷ் சிவம் தெரிவித்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பாலம் முழுமையடையாமல் கிடப்பதாலும், வரும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் அப்பகுதியில் தடுப்புகள் ஏதும் இல்லாததும் தான் விபத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்றும், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ