இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய புரட்சியாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 17) கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.


அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இன்று அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இரு மாநிலங்களிலும் சேர்த்து சுமார் ரூ. 26,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை!
அரியானா மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள ஜிந்த் (Jind) ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்படவுள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பசுமை ஆற்றல் மூலம் இயங்கும் இந்த ரயில் திட்டம், உலகின் மிக நீளமான மற்றும் அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அரியானாவில் ரூ.14,700 கோடி திட்டங்கள்:
ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிறகு, ஜிந்த் நகரில் உள்ள ஏகலவ்யா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு அரியானா மாநிலத்தின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.14,700 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநில திட்டங்கள்:
சண்டிகர்: சண்டிகர் செல்லும் பிரதமர், அங்கு ரூ.4,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பஞ்சாப்: இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ஜலந்தரில் ரூ.5,470 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார்.
பிரதமரின் இந்த ஒருநாள் பயணத்தின் மூலம் அரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகள் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளில் மிகப்பெரிய மேம்பாட்டைப் பெறவுள்ளன.
