சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரான நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை அடுத்து, ஐ.சி.சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 27ம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

இந்த பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பி.சி.சி.ஐ. செயலாளருமான ஜெய் ஷா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஜெய் ஷாவுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அவர் ஐசிசியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஜெய்ஷாவின் பதவிக்காலம் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 3 ஆண்டுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால்மியா, சரத்பவார் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்துள்ள நிலையில், தற்போது ஐசிசி தலைவராகும் மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார்.