நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. ‘சங்கல்ப் பத்ரா’ எனும் பெயரில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவருக்கு, முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளுக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் பயனடைந்த தலா ஒரு பயனாளிக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு என ஒவ்வொரு திட்ட பயனாளிகளுக்கும் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.
பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மையமாக கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவது குறித்து நாங்கள் பேசுகிறோம். இளைஞர்களின் கனவை நனவாக்க பணியாற்றுகிறோம். தீர்வுகளை பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம் என கூறினார்.