நீட் தீர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் நடத்த முடியாத இடங்களில் வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, நீட் தேர்வு சீரமைப்பு குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
நடப்பு ஆண்டு மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய பலர் அதிக மதிப்பெண்கள் பெற்றது என பல்வேறு மோசடிகள் அரங்கேறின. இது தொடர்பாக பிகார், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, பின்னர் அந்த வழக்குகள் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற ஆலோசனை படி நீட் தேர்வு நடைமுறைகளையும், தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைக்கவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக தயாரித்து மத்திய அரசிடம் வழங்கியுள்ளது.

அந்த அறிக்கையில், அனைத்து நீட் தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைன் மூலம் நடத்த முடியாத இடங்களில் கேள்வித்தாள்களை டிஜிட்டல் முறையில் தேர்வு மையங்களுக்கு அனுப்ப வேண்டும், பதில்களை மாணவர்கள் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் தேசிய தேர்வு முகமை பாதுகாப்பான தேர்வு மையங்களை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சீரமைப்புக்குழு, அரசுப்பள்ளி, கல்லூரிகளில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றும், தனியார் பள்ளி, கல்லூரிகளை தேர்வு மையங்களாக பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
நீட் தேர்வுககான பார்வையாளர்கள், தேர்வாளர்களாக தனியார் நபர்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், அதற்கு நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் நிரந்தரமான அதிகாரிகளை, ஊழியர்களை நியமிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை அறிக்கை தற்போது மத்திய கல்வித்துறை அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யவுள்ளது.