அதானி விவகாரம் தொடர்பாக பேச அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநிலங்களவையில் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். அப்போது கார்கேவுக்கும், அவைத் தலைவர் ஜெகதீப் தன்காருக்கும் இடையே காரசார வாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத்தலைவர் ஜெகதிப் தன்கர் உத்தரவிட்டார்.
இதேபோல், மக்களவை பகல் 12 மணிக்கு கூடியபோது அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் எழுந்து நின்று வலியுறுத்தினர். அப்போது, சபாநாயகர் ஒம் பிர்லா பேச அனுமதி மறுத்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனை அடுத்து, மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.