ஓடும் ரயிலில் துப்பாக்கிசூடு- 4 பேர் பலி
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஆர்.பி.எஃப் வீரர் கைது செய்யபட்டுள்ளார்.
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டத்தில் சக ஆர்.பி.எஃப் வீரர் மற்றும் மூன்று பயணிகள் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பித்து ஓடிய ஆர்.பி.எஃப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய ஆர்.பி.எஃப் வீரர் குமார் மற்றும் அவரது மூத்த ஏஎஸ்ஐ டிகா ராம் ஆகியோர் பாதுகாப்பிற்காக ரயிலில் நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது குமாருக்கும் ராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக ரயில்வே போலீசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த மூன்று பொதுமக்களில் இருவர் அப்துல் காதிர் மற்றும் அஸ்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூர் ரயிலில் ஆர்.பி.எஃப் வீரரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஏ.எஸ்.ஐ வீரரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சத்தை நிவாரண நிதியாகவும், இறந்த ஏ.எஸ்.ஐ வீரரின் இறுதிச் சடங்கிற்கு 20 ஆயிரமும், காப்பிட்டுத் தொகையாக 65 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.