வீட்டுப்பாடம் (Home Work) செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை அடித்ததில், எல்கேஜி (LKG) மாணவன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 வயதான சிறுவன் எல்கேஜி படித்து வந்தான். சம்பவத்தன்று அம்மாணவன் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த வகுப்பறை ஆசிரியை, மாணவனை அதட்டியதுடன் அவனது சட்டையைக் கழற்றி கன்னத்தில் பலமாக அறைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆசிரியை தாக்கிய அதிர்ச்சியில், அந்தச் சிறுவன் ஆசிரியையின் மடியிலேயே மயங்கிச் சரிந்து விழுந்துள்ளான். பதறிப்போன பள்ளி நிர்வாகம் சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவனின் உயிர் பிரிந்தது.
போலீசார் விசாரணை மற்றும் சலசலப்பு:
இச்சம்பவம் குறித்த தகவலறிந்து வந்த போலீசார், வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்றுக்கொடுத்த கையே உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றதால், ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளி வளாக முற்றுகையில் ஈடுபட்டனர். மாணவனின் மரணத்திற்கு காரணமான ஆசிரியை மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
