சிவ சேனா விவகாரம்; உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியிலிருந்து பிரிந்து சென்று, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார் ஏக்நாத் ஷிண்டே. இதற்கு பிறகு சிவசேனா கட்சியின் கொடி மற்றும் சின்னம் தங்களுக்கு சொந்தம் என இரு குழுக்களும் தனித்தனியே இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியது.
தேர்தல் ஆணையத்தால் வழக்கு விசாரிக்கப்படும் வரை சின்னம் மற்றும் கொடி முடக்கப்படும் என தெரிவித்தது. அதன்படி சமீபத்தில் நடைபெற்று முடிந்த அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தற்காலிக சின்னங்கள் இரு குழுக்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தற்காலிக சின்னங்களை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி சிவசேனா விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் விசாரணை செய்யப்படும் எனவும், டிசம்பர் 9ம் தேதிக்குள் இரு அணிகளும் அவர்கள் தரப்பில் வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கட்சிகள் உடைப்பு

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டனியில் இருந்து விலகிய முதலமைச்சர் நித்தீஷ் குமார் கட்சியையும் உடைப்பதற்கு முயற்சி மேற்கொண்டது. ஆனால் நித்தீஷ் குமார் சற்று கவனமுடன் செயல்பட்டதால் அவருடைய கட்சி தப்பித்து கொண்டது. அது போன்று தமிழ் நாட்டில் பாஜக பிடியில் இருந்து வெளியே வர முயற்சி செய்த அதிமுக தற்போது ஒபிஎஸ் அணி என்றும் இபிஎஸ் அணி என்றும் பிரிந்து திசை தெரியாமல் தடுமாறி கொண்டிருக்கிறது.