திமுக ஆட்சியில் மணல் மாஃபியாக்கள் கொடி கட்டி பறக்கின்றனர்- ஜெயக்குமார்
அதிமுகவினரை விமர்சிக்கும் பாஜகவினரை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது. தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என அமித்ஷாவிடம் கூறினோம். ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஊடகங்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. ஸ்டாலின் கையில் ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை. அனைத்து துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் திமுக ஆட்சியை அகற்றுவார்கள். தி.மு.க ஆட்சியில் மணல் மாஃபியாக்கள் கொடி கட்டி பறக்கின்றனர்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. எமர்ஜென்சி அளவுக்கு தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அலுவலகத்தில் புகுந்து விஏஓ படுகொலை செய்யப்படும் அளவுக்கு தமிழகத்தில் அசாராண சூழல் நிலவுகிறது. கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது என்பது முற்றிலும் தவறானது. கூலிக்கு ஆள் பிடித்து கூட்டி கூட்டத்தை வைத்துக்கொண்டு பன்னீர்செல்வம் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். மத்திய அமைச்சர் உடனான சந்திப்பை விமர்சித்த நிர்வாகி மீது அண்ணாமலை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் உடனான சந்திப்பு குறித்த விமர்சனங்களுக்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனக் கூறினார்.
