அழகான பெண்களை இனிக்க இனிக்க பேச வைத்து, படுக்கையில் நெருக்கமாக இருக்க வைத்து பின்னர் அதனை வீடியோ, படமாக எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பது ஹனி டிராப் என்பதாகும். கர்நாடகாவில் தனக்கு எதிராக இது மாதிரி ஹனி டிராப் வலை வீசப்பட்டு தோல்வி அடைந்து இருப்பதாகவும், கடந்த 20 வருடங்களில் 48 எம்எல்ஏக்களுக்கு மேலாக ஹனிடிராப் மோசடிக்கு இலக்காகி இருப்பதாகவும் கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இதுபற்றி உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், கர்நாடாக மாநிலத்தையே உலுக்கிய சமீபத்திய ஹனிட்ராப் வீடியோ சர்ச்சை தொடர்பாக “யாரையும் பாதுகாப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெளிவுபடுத்தி உள்ளார்.
கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தன்னை ஹனிட்ராப் பொறியில் சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஆண்டுகளில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 48 சட்டமன்ற உறுப்பினர்கள் குறிவைக்கப் பட்டதாகவும் குற்றம் சாட்டியபோது இந்த பிரச்சினை அங்கு பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பேசிய முதல்வர் சித்தராமய்யா, ”சட்டத்தை நிலைநாட்டவும் நீதியை உறுதி செய்யவும் அரசு உறுதி பூண்டுள்ளது. குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட எவரும் தண்டிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கப்படாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சர்ச்சை கர்நாடக சட்டமன்றத்தில் சூடான விவாதங்களைக் கிளப்பி உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக நீதி விசாரணை கோரியதுடன் சட்டமன்ற உறுப்பினர்களும் ஹனிட்ராப் வீடியோக்கள் மூலம் மிரட்டப்படுவதாகக் கூறியது.
அமைச்சர் ராஜண்ணா முறையான புகார் அளித்தவுடன் உயர் மட்ட விசாரணை தொடங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறியுள்ளார். இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன. வற்புறுத்தல், மிரட்டலுக்கான அடையாளச் சான்றாக சட்டமன்றத்தில் சிடிகளை ஒப்படைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கர்நாடகாவில் அரசியல் நெறிமுறைகள், பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. விசாரணை வெளி வரும்போது, இந்த விஷயத்தைக் கையாள்வதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பதை உறுதி செய்வதில் அனைவரின் பார்வையும் மாநில அரசின் மீது உள்ளது. நீதி நிலைநாட்டப்படும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள் என்றும் சித்தராமையா மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.