Homeசெய்திகள்அரசியல்மகாராஷ்டிராவில் பரபரப்பு: முதல்வர் யார்..? டெல்லியில் குவிந்த மகாயுதி கூட்டணி தலைவர்கள்

மகாராஷ்டிராவில் பரபரப்பு: முதல்வர் யார்..? டெல்லியில் குவிந்த மகாயுதி கூட்டணி தலைவர்கள்

-

- Advertisement -

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி இனி பாஜக-வுக்கு மட்டுமே என்பது தெளிவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுக்கும் எந்த முடிவும் கட்டுப்படுவோம். ஆட்சி அமைப்பதில் நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்று ஏக்நாத் ஷிண்டே தங்கள் தரப்பு நிலையை விளக்கி விட்டார்.

ஷிண்டேவின் இந்த பேச்சுக்கு பிறகு ஊகங்கள் ஓய்ந்த நிலையில், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, ​​பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கான பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பிரபுல் படேல், அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட மகாயுதி தலைவர்களை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இன்று டெல்லியில் சந்திக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பதவி யாருக்கு என்பது இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்து மகாயுதி கூட்டணியில் நிலவி வரும் சலசலப்புக்கு மத்தியில், ஏக்நாத் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவசேனா எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். சிவசேனா எம்.பி., நரேஷ் மஸ்கே, வக்ஃப் திருத்த மசோதா 2024 தொடர்பாக நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தின் நடுவே அமித் ஷாவை சந்திக்க சென்றார்.

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நேற்று டெல்லி சென்றடைந்தார். மாநில முதலமைச்சரின் முடிவு குறித்த முட்டுக்கட்டைக்கு தீர்வு காண பாஜக உயர்மட்ட தலைவர்களை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் குறித்த கேள்விக்கு, விவாதங்கள் நடைபெற்று வருவதால் விரைவில் பதில் அளிக்கப்படும் என்று ஃபட்னாவிஸ் கூறினார்.

எந்த கட்சியில் எத்தனை அமைச்சர்கள் என்பதும் முடிவு செய்யப்படும்.
மற்ற அமைச்சர் பதவிகள் குறித்து ஃபட்னாவிஸ் கூறுகையில், ‘‘முதலில் முதலமைச்சரின் முடிவு இறுதி செய்யப்படும். அதன்பிறகு அமைச்சர்கள் குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றார். சிவசேனா தலைவர் சஞ்சய் ஷிர்சத், அடுத்த முதல்வர் சிவசேனாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர், ‘‘முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். அவருக்கு பாஜக தலைவர்கள் ஆதரவளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்’’ என அவர் தெரிவித்தார். ஆனால், ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

டெல்லியில் அமித் ஷா உடன் சந்திப்பு இருப்பதாகவும், அது தொடர்பான அனைத்து முடிவுகளும் அங்கு எடுக்கப்படும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று டெல்லியில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், என்சிபியின் அஜித் பவார் இடையேயான சந்திப்புக்குப் பிறகு அதிகாரப் பகிர்வு குறித்து முடிவு செய்யப்படும்.

 

MUST READ