Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தில் இந்தி மொழியை தேசிய கல்விக்கொள்கை திணிக்காது- தர்மேந்திர பிரதான் உறுதி

தமிழகத்தில் இந்தி மொழியை தேசிய கல்விக்கொள்கை திணிக்காது- தர்மேந்திர பிரதான் உறுதி

-

- Advertisement -

தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்கமாட்டோம். தமிழக அரசின் எதிர்ப்புக்குப்பின், அரசியல்ரீதியான காரணங்கள் இருக்கின்றன என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்கப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரின் பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தும் மும்மொழிக் கொள்கையை மத்திய பாஜக அரசு திணிக்க முயல்வதாக குற்றம் சாட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

dharmendra pradhan

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்களில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் கறுப்பு மை கொண்டு அழித்து வரும் சம்பவங்கள் நடந்தன. பொள்ளாச்சி ரயில்வே நிலையம், திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பலகையில் இருக்கும் இந்தி எழுத்துக்களை திமுகவினர் கறுப்பு மை கொண்டு அழித்தனர். இந்த செயலில் ஈடுபட்ட திமுகவினர் 6 பேர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அஞ்சலகங்கள், பிஎஸ்என்எல் அலுவலகங்களில் இந்தியில் எழுதப்பட்ட எழுத்துகளை திமுகவினர் கறுப்பு மை கொண்டு அழித்துள்ளனர். இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ தேசியக் கல்விக் கொள்கை 2020ல் இந்தி மொழி மட்டும்தான் இருக்க வேண்டும் என ஒருபோதும் தெரிவிக்கவில்லை. கல்வி என்பது அந்தந்த மாநிலத்தின் தாய்மொழி அடிப்படையில் இருக்க வேண்டும். தமிழகத்திலும் தமிழ்மொழியில்தான் இருக்க வேண்டும்.

ஆனால், அரசியலுக்காக சிலர் செய்யும் செயல்களுக்கு நான் எந்தவிதமான பதிலும் தெரிவிக்க விரும்பவில்லை. தேசியக் கல்விக்கொள்கை தேசத்தில் உள்ள பல்வேறு மொழிகளையும் கவனத்தில் கொள்கிறது. அது இந்தி, தமிழ், ஒடியா, பஞ்சாபி என எதுவாக இருந்தாலும், கவனம் செலுத்தும். அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படும். ஆனால், தமிழகத்தில் சிலர் எதிர்க்கிறார்கள், அதற்குக்காரணம் அரசியல்தான். தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்கமாட்டோம். தமிழக அரசின் எதிர்ப்புக்குப்பின், அரசியல்ரீதியான காரணங்கள் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ மேம்பட்ட மொழிமாற்ற தொழில்நுட்பம் ஏற்கெனவே மொழிதொடர்பான தடைகளை அகற்றிவிட்டது. ஆதலால், மாணவர்கள் கூடுதல் மொழிச்சுமை கூடாது. வடமாநிலங்களில் ஒவ்வொருவரும் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது. தேநீர், பானிபூரி வாங்குவதாக இருந்தாலும், கழிவறை பயன்படுத்தவும் இந்தி தெரிந்திருப்பது முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ