மேற்குவங்கத்தில் SIR நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார். SIR நடவடிக்கைகள் மூலம் வாக்காளர்களின் பெயர்கள் தேவையற்ற முறையில் நீக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது மம்தா பானர்ஜி, “எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை கடிதங்கள் எழுதியும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார். மேலும், மாநில அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாகவும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காகவே SIR பணி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “எந்த ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே நீதிமன்றத்தின் நிலைப்பாடு. தேர்தல் ஆணையத்திற்கு இது குறித்து ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என்று கூறினர்.
தலைமை நீதிபதி, “உள்ளூர் பேச்சுவழக்குப் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றும் போது ஏற்படும் எழுத்துப்பிழை (spelling) முரண்பாடுகள் நாடு முழுவதும் காணப்படும் பொதுவான பிரச்னை. இதனை தேர்தல் ஆணையம் எவ்வாறு சரி செய்யப் போகிறது?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு தேர்தல் ஆணையத்தின் தரப்பில், “இந்த விவகாரத்தில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்ய ஒரு வார அவகாசம் தேவை” என கோரப்பட்டது. ஆனால், நீதிபதிகள், “எல்லாவற்றுக்கும் ஒரு காலவரம்பு உள்ளது. மெத்தனமாக செயல்படுவதை ஏற்க முடியாது. வழக்கை ஒத்திவைக்க முடியாது” எனக் கடுமையாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, SIR நடவடிக்கைகள் தொடர்பான இந்த மனுவில், இரு தினங்களுக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிமன்றம் அறிவித்தது.


