மருந்து தட்டுபாடு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம் மனு அளித்து தவரான தகவலை பரப்பி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 32 மருத்துவ கிடங்குகளில் இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ஹயக்ரீவர் நகர் 3-வது குறுக்கு தெருவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் கட்டுமானப் பணிகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.58 லட்சம் ரூபாய் செலவில் உள் விளையாட்டு அரங்கத்தை அமைக்க எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டுமான பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மருத்து தட்டுபாடு என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவர்னரிடம் மனு தந்து உள்ளார். சேலத்தில் மருந்து தட்டுபாடு என கூறி 4 மணி நேரத்தில் சென்று ஆய்வு செய்தேன். அங்கு எடப்பாடி பழனிச்சாமி தட்டுபாடு என கூறிய மருந்துகளை எடுத்து காட்டி இதுவா தட்டுபாடு என்றேன். அவர் சொன்னதை கிளி பிள்ளை போல் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் மருத்து தட்டுபாடு என்று மீண்டும் மீண்டும் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் 32 மருந்து சேமிப்பு கிடங்கு உள்ளது. எந்த கிடங்கிற்கு வேண்டுமானாலும் எந்த கட்சி அரசியல் தலைவரும் சென்று இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது மக்களுக்கு எந்த மருந்து தட்டுபாடு இருந்தாலும் 104க்கு போன் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி வெளிப்படை தன்மையுடன் நிர்வாகம் நடத்தும் போது இரவு 3 மணிக்கு ஒரு பெண் மருத்துவ மனையில் இருந்து வெளியேறி சென்று தண்டவாளத்தில் அடிப்பட்டதற்கு மருத்துவர்கள் தள்ளி விட்டதை போல் தோற்றத்தை உருவாக்குவது மருத்துவ சேவையை கேவலப்படுத்துவது போல் இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனையுடன் கூறியுள்ளார்.