வேட்புமனு சொத்து விவகாரம் தொடர்பான எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனுவை ஏப்ரல் 14 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை தவறாக குறிப்பிட்டதாகக் கூறி மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், இந்த விவகாரத்தில் சேலம் நீதிமன்ற உத்தரவுக்கு தலையிட முடியாது என்றும், காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில், எதிர்மனுதாரர் மிலானி தரப்பில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு 16 முறை பட்டியலிடப்பட்ட போதிலும் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பணம் பறிமுதல் செய்யப்பட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை: முக்கிய வழிகாட்டுதல்கள்
