அதிமுகவில் சீட் கிடைக்காத மாஜி இன்ஸ்பெக்டர், தவெகவில் இணைந்த நிலையில், அவருக்கு சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.
சேலம் மேற்கு தொகுதிக்கு மாஜி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடன் இவர் போட்டியிடுகிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில், இன்ஸ்பெக்டராக இருந்த லட்சுமணன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், மாஜி இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிலிருந்து மீண்டு வெளியே வந்த லட்சுமணன், சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர், ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கிய இவர், பெரிய அளவில் வருமானம் ஈட்டினார். பின்னா் அதிமுகவில் சேர்ந்து, எடப்பாடி பழனிசாமியை அடிக்கடி சந்தித்து நெருக்கத்தை ஏற்படுத்தி வந்தார்.

மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்த லட்சுமணன், அதிமுக தலைமை நிலையத்தில் சேலம் மேற்கு, சங்ககிரி, சேலம் தெற்கு, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். தனக்கு சீட் கொடுத்தால், கட்சிக்காக ரூ.100 கோடி வரை செலவு செய்ய தயார் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுக சார்பில் லட்சுமணனுக்கு சீட் வழங்கவில்லை. அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு சேலம் மேற்கு தொகுதியை ஒதுக்கிய நிலையில், சங்ககிரியிலும் சீட் தராததால் விரக்தியடைந்த மாஜி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், அதிமுகவில் இருந்து விலகினார்.
இதனிடையே, திடீர் திருப்பமாக நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அதற்கு பிரதிபலனாக அவர் விரும்பியபடி, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தவெக நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வழங்கியும், தேர்தல் செலவுக்கு பணத்தை அள்ளி இறைத்தும் களமாடி வருகிறார். சேலம் மேற்கு தொகுதியை கொடுத்தால், பல கோடி செலவு செய்வதாக கூறியதால், அவருக்கு சீட் கிடைத்துள்ளது என தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பெரம்பூரில் பிரச்சாரத்திற்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை – தவெக பரபரப்பு புகார்
