2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பெரம்பூர் தொகுதி வேட்பாளருமான தளபதி விஜய் இன்று மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது முறையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தைச் சுற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் பெரம்பூர் தொகுதி வேட்பாளரான விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது போதுமான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்திடம் முறையான புகார் ஒன்றையும் அளித்துள்ளது. அந்த புகாரில், பெரம்பூரில் விஜய்யின் பிரச்சாரத்தைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்த போதிலும், தேவையான அளவு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பூரிலிருந்து அடுத்த கட்டமாக கொளத்தூருக்கு வாகனப் பேரணியாகச் செல்ல திட்டமிட்டிருந்தபோதும், போக்குவரத்து மேலாண்மை முறையாக செய்யப்படாததால் பேரணி நகர முடியாமல் பல மணி நேரம் ஸ்தம்பித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி பிரச்சாரத்தை தொடர முடியாமல் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவு வழங்கி, விஜய்யின் பிரச்சாரத்திற்குத் தேவையான கூடுதல் பாதுகாப்பு மற்றும் தடையற்ற போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து அரசியல் கட்சிகளும் சமமான சூழலில் தங்களது ஜனநாயகப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், நிர்வாக ரீதியான பாரபட்சம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அமைதியான முறையில் ஆதரவை வெளிப்படுத்தத் திரண்ட பொதுமக்களுக்கு அடிப்படை பாதுகாப்பு கூட வழங்கப்படாதது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும்” என தமிழக வெற்றிக் கழகம் தனது புகாரில் தெரிவித்துள்ளது.
