” சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். அண்டை மாநிலமான கேரளாவில் தங்கள் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்து அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.,பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் விடுத்துள்ள அறிக்கையில்:
”பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு என்றுமே அரணாக நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது பட்டியலின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருப்பது தமிழ்நாட்டில் மட்டுமே என்ற தரவுகள் பெருமை தரக்கூடியதாகும்.
உயர் நீதிமன்ற நீதிபதி என்றாலே உயர் சாதியினர் மட்டும் தான் என்றிருந்த நிலையை மாற்றியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு தான்.
1974 ஆம் ஆண்டு பட்டியலினத்தைச் சேர்ந்த அ. வரதராஜனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைத்தவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு.க.கருணாநிதிதான். பின்னர் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி வரை எட்டினார்.
இதற்கு ஒரே காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் தான். உச்சகட்டமாக, அனைவரும் அர்ச்சகராலாம் என்ற சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். அதனைச் செயலுக்கு கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோயிலுக்குள்ளேயே நுழைய முடியாமல் இருந்த பட்டியலின மக்கள், இன்றைக்குக் கோயில் கருவறைக்குள் சென்று பூசை செய்வதற்கு திராவிட மாடல் அரசே காரணம்.
ஆதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களைத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் மூலம் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்புப் பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
சாதி வேறுபாடுகளற்ற மயானங்களைப் பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரி சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகையாக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.
அரசின் நடவடிக்கை காரணமாக, ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தைச் செயல்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் வகையில் கடனுதவியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
அருந்ததி மக்களுக்கு உள் ஒதுக்கீடு வரை, சமூக நீதியை நிலைநாட்டுவதில் என்றைக்குமே திராவிட முற்போக்குக் கழகம் பின்வாங்கியதில்லை என்பது தான் வரலாறு.
3 பட்டிலியனத்தைச் சேர்ந்தவர்கள் என, அதிகபட்சமாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது, காமராஜர் ஆட்சிக்குப் பிறகு இப்போது தான். அதில் ஒருவருக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியது சமீப காலங்களில் நிகழாத ஒன்று.
எல்லாவற்றுக்கும் மேல், பட்டியலினத்தைச் சேர்ந்த முருகானந்தம் தமிழ்நாட்டின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டு, அவரும் சமூக நீதியை கட்டிக்காக்க சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆம்ஸ்ட்ராங்கை சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக நியமித்த திராவிட மாடல் அரசின் நடவடிக்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூக நீதிப் பார்வையை வெளிப்படுத்துகிறது
இவ்வாறு உயரிய பொறுப்புகளுக்கு பட்டியலினத்தவர்களை நியமித்து அதிகாரத்தை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், இவற்றையெல்லாம் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, பொத்தாம் பொதுவாக திமுக அரசு மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இது தவறு என்பதற்கான சான்றுகளே மேலே உள்ளவை.
சாதி உணர்வு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். அண்டை மாநிலமான கேரளாவில் தங்கள் பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்து அழைக்கும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை மக்கள் தவிர்த்திருப்பதற்கு, தந்தை பெரியாரின் வழி வந்த திராவிட முன்னேற்றக் கழகமே காரணம்.
பட்டியலின மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொடுமைகள் நிகழ்த்தப்படுவது போன்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.
கடந்த ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதனையடுத்து, தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சாதிய மோதல்கள் ஏதும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் ஆணவக்கொலைகள் நடைபெறவில்லை.
கடந்த காலங்களில் ஆணவக்கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தரப்பட்டதே இதற்குக் காரணம்.
சாதி சார்ந்த சமுதாயத்தில் சமூக நீதியை நிலைநாட்டிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. இந்தியாவிலேயே வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத பெருமை இது.
சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மோதல்களை உருவாக்கி வடக்கில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதேவேலையைத் தமிழ்நாட்டில் செய்யப் பலரும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அதனை தமிழ்நாடு அரசு சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது. அதற்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதற்கு, கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்த அமோக ஆதரவே சான்று.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் அதிக நடமாட்டம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் வேண்டுமென்றே முயல்கிறார்கள்.
போதைப் பொருட்கள் கடத்தலின் தலைநகரம் என்ற பெயரை குஜராத் மாநிலம் தான் இன்றைக்கும் தக்க வைத்திருக்கிறது. மாதந்தோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன.
அதையும் மீறி அங்கிருந்து தான் பல மாநிலங்களுக்குப் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் போதை ஒழிப்பு நடவடிக்கையை நேரடியாகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
அமைதியான மாநிலமாகவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை இல்லாத மாநிலமாகவும் இருப்பதால் தான், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நிலைமை இப்படியிருக்க, அனைவருக்குமான அரசாக செயல்படும் திராவிட மாடல் அரசுக்கு எதிராக பாஜகவின் குரலை சிலர் இங்கு பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பழுக்கற்ற அரசுக்கு எதிராக அவதூறுகள் தொடர்ந்தால், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் இவர்களுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆவடியில் நரிக்குறவர் மக்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய நடிகர் தாடி பாலாஜி