75வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா மறைவுக்குபின் யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்தி இருக்கலாம். இதில் எந்த பெருமையும் இல்லை. இரட்டை இலை சின்னம் இருந்தும் கடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான். எடப்பாடி பழனிசாமியோடு இருப்பது உண்மையான அதிமுக தொண்டர்கள் அல்ல.
திமுகவை எடப்பாடி பழனிசாமியால் தனியாக வீழ்த்த முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுகவை வீழ்த்த பலமான கூட்டணி தேவை. பணபலத்தை மட்டும் வைத்துக்கொண்டு கட்சியை வெற்றி பெறவைக்க முடியாது. பசும்பொன் தேவர் பிறந்த நாளுக்கு ஈபிஎஸ் வரவில்லை. ஓர் அணியில் செயல்பட்டால் தான், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெல்ல முடியும். திமுகவை எதிர்க்க அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். அமமுக ஒரு காலத்தில் ஆட்சி அமைக்கும். எங்களுடைய வழி நேர்மையான வழி. நாங்கள் யாருக்கும் துரோகம் செய்துவரவில்லை. இதயதெய்வம் அம்மாவின் உண்மையான நல்லாட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைத்திட உறுதி ஏற்போம்” எனக் கூறினார்,
