பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதன் முறையாக தகுதி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 211 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 301 ரன்களும் எடுத்தன. பின்னர் 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. எளிய இலக்கை விரட்டிய தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணி 8 விக்கெட்டை இழந்து வெற்றிக்காக 51 ரன்கள் தேவை என்ற நிலையில் டெய்ல் எண்டர்களான மார்கோ ஜேன்சனும், காகிசோ ரபடாவும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் அரை சதம் விளாசி அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய தென்ஆப்பிரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்று அசத்தியது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11 முதல் 15 ம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் மற்றொரு அணி யார் என்ற பந்தயத்தில் இந்தியாவா ? ஆஸ்திரேலியாவா? என்ற போட்டி சூடுபிடித்துள்ளது. மெல்பனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகும். தற்போது நிலவரப்படி 58.89 பெர்சண்டைல் புள்ளிகளுடம் ஆஸ்திரேலியா இரண்டாமிடத்திலும், 55.88 புள்ளிகளுடம் இந்தியா மூன்றாமிடத்திலும் உள்ளது.