- Advertisement -
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன காரணமாக இன்று முதல் வரும் 15ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோல் நாளை சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர் திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.