கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு முன்னேறியதாக ராகுல் பெருமிதம் தெரிவித்திருந்தார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞரின் சமூகப் பார்வை, லட்சக்கணக்கானோரை சுய மரியாதையுடன் வாழ வழிவகுத்ததாகவும், கலைஞரின் கனவுகளை நனவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்! என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவின் முக்கியத்துவம் குறித்த அன்பான வாழ்த்துகளுக்கு, சகோதரர் ராகுல்காந்திக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.